அதிகாரம் - மலர்

blog image

பூரித்துப் பொன்போல் பொலிந்துநகை செய்துலகை

ஆரிக்கப் பூவல்லால் ஆர்.

 

பிஞ்சாகிக் காயாய்க்; கனியான வாழ்விற்கு

தஞ்சமென நிற்கும் மலர்.

 

ஆண்டவனைச் சேர்ந்தினிதே அங்கமெலாம் மேல்ஏறி

பூண்டுவகை கொள்ளுமே பூ.

 

வாணாளின் எல்லையெண்ணி வேதனைகொண் டேங்காது

தேனார்ந் திருக்கும் தெளி.  

 

மற்றவரின் மேன்மையிலே தான்நிறையும் பெற்றியினை

உற்றதொரு பூவில் உணர்.

 

பெண்களுடை கூந்தலுக்குப் பேரழகு ஊட்டிவிடும்

தண்மைமிகு ஆபரணம் தான்.  

 

தாயைப் பிரிந்த தனதுதுயர் பட்டலைந்த

சாயலையும் காட்டாது  பூ.

 

இல்லாது இல்லையொரு உற்சவமாம் என்றவகை

தொல்லார்ந்த ஈசனொக்கும்  பூ.

 

மாதருடை பொன்மேனி நின்றொளிரும் பூவகைக்கு

ஏதுண்டு இவ்வுலகில் ஈடு.

 

மென்மையால் செம்மையதால் மேன்மையுறும் வாசனையால்

நின்தனக்கு நீயே நிகர்.

 

Share :
Tag :
Comments